Tuesday 9 September 2014

விமர்சனம் » பொறியாளன்


படம் : பொறியாளன் 
நடிகர் : ஹரிஷ் கல்யாண் 
நடிகை : ஆனந்தி 
இயக்குனர் : , தாணுகுமார்


விமர்சனம் » 

பொறியாளன் 

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வெற்றிமாறன் தனது உதவியாளர்
தாணுகுமாரின் இயக்கத்தில், தயாரித்திருக்கும் திரைப்படம், 'சிந்து சமவெளி' படத்தில் அமலாபாலுடன்
அறிமுகமான ஹரீஷ் கல்யாண், சிவில் இன்ஜினியராக சீரியஸான சப்ஜெக்ட்டில்
புகுந்து புறப்பட்டிருக்கும் படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறது 'பொறியாளன்'.
இனி 'பொறியாளன்', 
வெற்றியாளனா.? 
நெறியாளனா.? 
நேர்மையாளனா..? என பார்ப்போம்...!

 'ஆடுகளம்' நரேனின் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தில் பணிபுரியும் இளம் சிவில் இன்ஜினியரான
ஹரீஷ் கல்யாணுக்கு, 'சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி, தானே கன்ஸ்ட்ரக்ஷ்ன் பிஸினஸ் செய்ய
வேண்டுமென்ற ஆசை'. 
அதற்கு சில கோடிகள் தேவை என்பதால், ஹரீஷின் ஆசை தள்ளி தள்ளிபோகிறது. ஒரு அசாதாரணமான சூழலில் ஹரீஷ், நரேனிடமிருந்து வேலையை விட்டு நிற்கிறார். அதேநேரம், ஹீரோ ஹரீஷின் காதலி ஆனந்தி(அறிமுக நாயகி)யின் அண்ணனும், ஹரீஷின் நண்பனுமான அஜெய்ராஜ், ஹரீஷ்க்கு வலிய உதவ முன் வருகிறார். அதுவும் எப்படி? அடாவடி கந்து வட்டி பேர்வழி அச்சுத குமாரி (அறிமுக வில்லன்)டம் வட்டி வசூல்
செய்பவராக வேலை பார்க்கும் அஜய்ராஜ்., தன் முதலாளி ஒரு கொலை கேஸூக்காக
உள்ளே போயிருக்கும் நேரம் பார்த்து, வேறு சிலரது பெயரில் அவர் வீட்டிலிருந்து கடன்
வாங்கி நண்பனின் பிஸினஸ் ஆசைக்கு பெரிய அளவில் உதவுகிறார். 

நண்பர்களின் போதாதகாலம், ஒரு ஏமாற்று பேர்வழியிடம் இடம் வாங்குகிறேன் பேர்வழி... என 2
கோடியையும் ஏமாறுகிறார் ஹரீஷ். இதனால் ஹரீஷ் கல்யாணின் எதிர்காலமும், காதலும்
கேள்விகுறியாகிறது, நண்பர் அஜய்ராஜின் உயிருக்கும், உடமைக்கும், உறவுகளுக்கும் அச்சுறுத்தல்
ஏற்படுகிறது. அதனால் ஹீரோ எடுக்கும் ஆக்ஷ்ன் அவதாரமும், விதியும் மதியும்
அவருக்கு துணை நிற்கும் சந்தர்ப்பங்களும் தான் 'பொறியாளன்' படம் மொத்தமும்! ஒருசில அரசுத்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, ஒரே இடத்தை இரண்டு- மூன்று பேருக்கு விற்கும் இன்றைய ரியல் எஸ்டேட் மோசடிகளை, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொல்லாத அளவிற்கு புட்டு புட்டு வைத்திருக்கும் கதை, திரைக்கதைக்காக இயக்குநர் தாணு குமாருக்கு ஒரு பெரிய 'ஹேட்ஸ் ஆப்' சொல்லியே ஆக வேண்டும்! 

ஹீரோ ஹரீஷ் கல்யாண், முந்தைய படங்களைக் காட்டிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். ஆனால்
அவரது ஒல்லி உருவத்திற்கும், உயரத்திற்கும் இதுமாதிரி வலுவான கதைகள் ''குருவி தலையில் பனங்காய்
வைத்த கதை''யாக இருக்கிறது. ஆனாலும் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் தீவிரத்தையும்,
வலிமையையும் உணர்ந்து 'பலே' சொல்லுமளவிற்கு தன் நடிப்பால் பளிச்சிட்டிருக்கிறார் ஹரீஷ் பேஷ்,
பேஷ்! ஆனாலும் பொறியாளனாக ஹரீஷ் படத்தில் அவர் தொழில் சம்பந்தமாக ஒன்றுமே பெரிதாக
செய்யாதது, டைட்டிலுக்கு பொருத்தமாக இல்லை! அறிமுகநாயகி ஆனந்தி, ஆக்ஷ்ன் படங்களில் காதலிக்கும் கதாநாயகிக்கும் உரிய முக்கியத்துவம் உணர்ந்து கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்தும், கவர்ச்சி மற்றும் இளமை முறுக்கேறும் காட்சிகளில் துடித்தும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். 

அறிமுக நண்பர் அஜய்ராஜ், வில்லன் அச்சுதகுமார், மோசடி பேர் வழியாக வரும் நடிகர் மோகன்ராம்
உள்ளிட்டோரும் 'நச்' தேர்வு, 'டச்' நடிப்பு. போலீஸ் கமிஷனர் ஆபிசில்
மோகன்ராமை பற்றி ஒரு போலீஸ் ஆபிசர், தவறுதலாக சொல்லியும், அதுப்பற்றிய விழிப்புணர்வோ,
சந்தேகமோ துளியுமின்றி மீண்டும் ஹீரோ ஹரீஷ் அன் கோவினர் மோகன்ராமிடம் ரூ.65 ஆயிரம்
கோட்டை விடுவதும், மோகன் ராம்மையும் 'கோவா' வரை கோட்டை விடுவதும் திரைக்கதையில்
உள்ள ஓட்டைகள்... இதையும், 'ஆடுகளம்' நரேன், மயில்சாமி உள்ளிட்டோரையும் இயக்குநர் இன்னும் சரியாக கையாண்டிருந்திருக்கலாம்! காட்சிகளில் பல புதுமைகளை குறிப்பாக காதல் காட்சிகளிலும், கலவர காட்சிகளிலும் பல புதுமைகளை புகுத்தியிருக்கும் இயக்குநர் தாணு குமார், கதை விஷயத்தில் தன் குருநாதர்
வெற்றிமாறன் 'பொல்லாதவன்' படத்தையே கொஞ்சம் களம் மாற்றி படமாக்கியிருப்பதாக
தோன்றுவது பொறியாளனின் பலமா? பலவீனமா தெரியவில்லை! 

அதில் ஹீரோ தனுஷின் பைக் பறிபோகும், இதில் ஹீரோ ஹரீஷின் பணம் பறிபோகிறது. அதைத்தொடர்ந்து காதல் கதை, கனமான கதை களத்திற்கு மாறும் இரண்டு படங்களிலும் இதுவே நடந்தேறி இருக்கிறது. 

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, எம்.எஸ்.ஜோன்ஸின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன்., தமிழ்
சினிமாவில் இதுவரை சொல்லப்படாத விதத்தில் ரியல் எஸ்டேட் மோசடிகளையும்,
கத்துவட்டி கொடுமைகளையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தாணு குமார். 

அந்த விதத்தில்,
'பொறியாளன்' - 'வெற்றியாளன்'!
 ஆனால், ஒரு பொறியாளனாக..?!!

source:

dhinamalar

0 comments:

Post a Comment